ஜி. யு. போப் (1820 - 1908)

ஜி. யு. போப் (1820 - 1908)

அறிமுகம்

ஜி.யு. போப் கனடாவில் பிரின்ஸ் எட்வெர்ட் தீவு என்னுமிடத்தில் ஏப்ரல் 24ந்தேதி 1820-ம் ஆண்டில்   பிறந்தார். 19 வயது வரை இங்கிலாந்து ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பணியாற்றிய தமிழறிஞர். அவருடைய இறுதி விருப்பம் அவரது தமிழ்ப்பற்றை வெளிக்காட்டுவதாக அமைந்து இருந்தது. 

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்றும், 

என் கல்லறையை அமைப்பதற்காகும் செலவில் ஒரு பகுதி தமிழ் மக்களின் நன்கொடையாக அமைய வேண்டும் மற்றும்  தனது கல்லறையின் மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன்’ உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று செதுக்கப்படவேண்டும் என்றும் தன் விருப்பத்தை எழுதி வைத்தார்.

தமிழ் மற்றும் இலக்கியப் பணி 

  • அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதி தன் சந்தேகங்களை போக்கிக் கொள்வார்.
  • ஆங்கில மொழி இதழ்களில் (Royal Asiatic Quarterly, The Indian Magazine)தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழ் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.
  • இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்று வந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார்
  • கலாசாலை அமையவும், நூல் நிலையம் உருவாகவும் பாடுபட்டார். 

படைப்புகள் 

  • தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என மூன்று பாகமாக எழுதினார்.
  • மேலைநாட்டார் தமிழை எளிதில் கற்றக் கொள்ளும் வகையில் தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்–தமிழ் அகராதி ஒன்றையும் போப் வெளியிட்டார். 
  • திருக்குறள், நாலடியார், பழமொழி, இனியவை நாற்பது முதலிய நூல்களில் இருந்து ஒழுக்க நெறியை போதிக்கும் சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து தனிச்செய்யுள் கலம்பகம் என்ற பெயரில் தொகை நூல் ஒன்றை வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு

  • 1886ஆம் ஆண்டு திருக்குறளை The Sacred Kural என்று 1,330 குறள்களையும் முதன்முதலாக  முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • தமிழ் மீது பெரும்பற்றுக் கொண்ட இவர், நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 
  • ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு .

விருதுகள் 

  • உதகையில் அவரது கல்விப் பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர்       மறைநூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார்.
  • தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் உருவச்சிலை அமைத்து கவுரவப்படுத்தியுள்ளது .