ஆ மாதவன் (1934 - 2021)

ஆ.மாதவன்

(1934 - 2021)

அறிமுகம்

ஆ. மாதவன் 1934இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ.மாதவனின் தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோயில். பிளவுபடாத திருவிதாங்கூர் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்குக் குடியேறிவிட்டனர். பள்ளிப்படிப்பை முடித்த ஆ. மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955இல் 'சிறுகதை' இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியத்தளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத்தெருக்கதைகள் இவருக்குப் புகழைத் தேடித்தந்த தொகுதி. சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. அவர் விமர்சகர்களால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். தமிழிலக்கியத்தில் ஒரு கடைத்தெரு இலக்கியப்பதிவு பெறுவது ஆ. மாதவன் கதைகள் வழியாகவே.

1974இல் ஆ. மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளிவந்தது. கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982இல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ. மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990இல் அவரது மூன்றாம் நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.

மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974இல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002இல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார்.

 

விருதுகள்

தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது

2016 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது

 ஆக்கங்கள்

சிறுகதைத் தொகுப்பு

மோகபல்லவி 1974

கடைத்தெருக்கதைகள் 1974

காமினிமூலம் 1975

மாதவன் கதைகள் 1984

ஆனைச்சந்தம் 1990

அரேபியக்குதிரை 1995

ஆ.மாதவன் கதைகள், முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம்

புதினங்கள்

புனலும் மணலும் (1974)