'மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரனார் (1815 - 1876)

'மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரனார் (1815  - 1876)

அறிமுகம் 

பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்ட, தமிழ் அறிஞர் ‘மகாவித்வான்’ மீனாட்சிசுந்தரம்,  திருச்சி அருகேயுள்ள எண்ணெயூரில்‌ 1815-இல்‌ பிறந்தார்‌. அபார நினைவாற்றல்‌ கொண்டிருந்த இவர்‌, பாடல்களைப்‌ படித்த வேகத்தில்‌ மனதில்‌ பதிய வைத்துக்‌ கொண்டு விடுவார்‌. சிறுவயதிலேயே யாப்பிலக்கணத்துக்கு தக்கபடி, செய்யுள் புனையும் ஆற்றல் பெற்றவர்‌. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் அம்பலவாண முனிவர், கீழ்வேளூர் சுப்பிரமணிய பண்டாரம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்,  ‘தண்டியலங்கார’  பரதேசியார் ஆகியோரிடம் பல்வேறு காலகட்டங்களில் பாடம் பயின்றவர். 19-ஆம்‌ நூற்றாண்டில்‌ தமிழில்‌ அதிக நூல்களை இயற்றியவர்‌ இவரே.

தமிழ் மற்றும் இலக்கியப் பணி  

  • இசையில் பற்றுக் கொண்டிருந்த உ.வே.சா வை தமிழில் ஆர்வம் கொள்ள செய்தது இவரின் சிகரமான தமிழ்த்தொண்டு . 
  • தமிழ் கற்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டார். தனது குடும்பம் வறுமையில் உழன்ற போதும் நாடி வந்த மாணாக்கர்களுக்கு உறைவிடத்துடன் உணவும் அளித்து தமிழ் போதித்த பெருந்தகையாளர்.
  • உ.வே.சாமிநாதர், குலாம்காதர் நாவலர், சோடசாவதானம் சுப்பராயர், பூவாளூர் தியாகராயர், சவுரி ராயலு ஆகியோர் இவரின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • தமிழ் மொழியில் இவரே அதிக எண்ணிக்கையிலான தல புராணங்களைப் பாடியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் இவரால் பாடப் பெற்றுள்ளன. 

படைப்புகள்

  • இவர் பாடிய திருநாகைக் காரோணப் புராணமும், மாயூரப் புராணமும் பெருங்காப்பியங்களாகப் போற்றப்படும் சிறப்பு மிக்கன. 
  • தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், இறைவன்- இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார்.
  • திருவானைக்காத் திருவந்தாதி, வாட்போக்கிக் கலம்பகம், சீர்காழிக் கோவை, அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்.
  • இவர் எழுதியவற்றில்,  ‘குசேலோபாக்கியானம்’ என்ற காப்பியமும், ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை. 
  • சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார்.
  • மாயூரம் வேதநாயகம் அவர்களிடம் கொண்டிருந்த நெருங்கிய நட்பின் காரணமாக, அவரைப்பாராட்டிக் ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்
  • இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. இவருடைய முதன்மைச் சீடரான தமிழ்த்தாத்தா உ.வே.சா. மீனாட்சி சுந்தரனாரின்  5,021 பாடல்களைப் பாதுகாத்து வழங்கி உள்ளார்.
  • உ.வே.சா. இவரது படைப்புகளுள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து   'ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு' என்ற தொகுப்பை வெளியிட்டார்.

விருதுகள்/பட்டங்கள்/சிறப்புகள் 

  • ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், புலவர்களின் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.