செந்தமிழ்சிற்பிகள்

வீரமாமுனிவர் (1680 – 1747)

வீரமாமுனிவர் (1680 – 1747)

அறிமுகம்

இத்தாலி, கேசுதிகிலியோன் என்ற சிற்றூரில்  நவம்பர் 8-ந்தேதி பிறந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி கிறித்துவ மதம் பரப்பும் நோக்கில் 1710-ஆம் ஆண்டு தமிழகம்‌ வந்தார். அதற்காக சுப்பிரதீபக்கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்றார். தமிழ் மேல் கொண்ட பற்று காரணமாக  தன் பெயரை நல்ல தமிழில் வீரமாமுனிவர் என தன் இயற்பெயரின் பொருள்பட மாற்றிக் கொண்டார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 

தமிழ் மற்றும் இலக்கியப் பணி   

  • இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.  
  • உயிர் எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களில் நெடில் ஓசையை குறிப்பதற்காக “ஆ, ஏ” எனவும் மற்றும் நெட்டெழுத்து கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே,பே) வழக்கத்தை உண்டாக்கியவர். 
  • இவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள், இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. 

படைப்புகள்

  • தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு,  அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். 
  • கவிதை வடிவில் இருந்து வந்த தமிழ் இலக்கிய இலக்கணங்களை எளிய உரைநடையாக மாற்றினார். 
  •  தமிழ்–லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். 
  • 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். 
  •  பெயரகராதி', 'பொருளகராதி', 'தொகையகராதி', 'தொடையகராதி'         ஆகிய அகராதிகளை அமைத்துத்‌ தமிழுக்குச்‌ செழுமை சேர்த்தார்‌. 
  • சதுரகராதி’ உருவாக்கி நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தார்
  • வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், பரமார்த்தகுரு கதை, திருக்காவலூர்க்கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, தேம்பாவணி உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்

மொழிபெயர்ப்புகள்

  • மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் சிறப்பை மேல்நாட்டார் உணர, திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். 
  • தேவாரம், திருப்புகழ், நன்னூல் ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

விருதுகள்/பட்டங்கள்/சிறப்புகள் 

  • இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால் இவர் ‘சுவடி தேடும் சாமியார்’ எனவும்,
  • மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனவும், 
  • தேம்பாவணி இயற்றியதற்காக “செந்தமிழ் தேசிகர்“ எனவும் போற்றப்பட்டார்.