பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933 – 1995) 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933 – 1995) 

அறிமுகம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கி தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர். பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர், சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் இதழை1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார்.பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம் தோன்றியபோது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

படைப்புகள்
அறுபருவத் திருக்கூத்து
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் (2005) கட்டுரைத் தொகுப்பு - தென்மொழி பதிப்பகம்
இட்ட சாவம் முட்டியது
இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே [சொற்பொழிவு நூல்] (1991); நிறைமொழி வெளியீடு, சென்னை
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள் (உரைப்பா)
கழுதை அழுத கதை
கனிச்சாறு (10+ பாடற்தொகுதிகள்) (1948; 1956)
கொய்யாக் கனி (பாவியம்) (1956)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு (2005)
செயலும் செயல்திறனும் (1988 & 2005)
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தன்னுணர்வு (1977, 1982)
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1 (உரைநூல்) (அக்.1997 & ஏப்.2006) ; தென்மொழி பதிப்பகம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
நமக்குள் நாம்....
நூறாசிரியம் (1996)[7]; இலக்கியம்‌ (செய்யுள்‌ -உரையுடன்‌]
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு, குழந்தைப்பாடல்கள் (1972 & 2006)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக் கொத்து (இரு தொகுதிகள்) (1962)[1]
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
அருளி
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை (2005) கட்டுரைத் தொகுப்பு - தென்மொழி பதிப்பகம்

விருதுகள் /சிறப்புகள்
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராகக் கருதப்படுகிறார் பெருஞ்சித்திரனார். இவர் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. "தமிழ்த்தேசியத்தின் தந்தை" எனவும் தமிழ்த்தேசியர்களால் போற்றப்படுகி்றார். பல்வேறு இயக்கங்களும் கல்வி அறக்கட்டளைகளும் பெருஞ்சித்திரனாரின் வழிமரபினரால் நடத்தப்படுகின்றன.