ஆர் சூடாமணி (1931 - 2010)

ஆர். சூடாமணி

(1931 - 2010)

பிறப்பு      : 10.01.1931 (சென்னை)

மறைவு     : 13.09.2010

பெற்றோர்  : ராகவன், கனகவல்லி

 

  •         சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         இடைநிலை இதழ்களிலும் வணிக இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார்.
  •         சூடாமணி ராகவன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் எழுதினார்.
  •         சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட இவருடைய தாயைப் போலவே சூடாமணியும் நீர்வண்ண ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
  •         இலக்கியச் சிந்தனை விருது, மும்பை தமிழ்ச் சங்க விருது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

சூடாமணி கதைகள்

தனிமைத்தளிர்

மனதுக்கு இனியவள்

இரவுச்சுடர்




ஆர். சூடாமணி என்கிற பெண் படைப்பாளி 1954 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர், 10.01.1931இல் சென்னையில் பிறந்தவர். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை என்றாலும் தன் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவு ஆங்கில மொழித்திறம் உடையவர். ஆங்கிலத்தில் நேரடியாகச் சிறுகதை படைத்தலும் உண்டு. இவருடைய சிறுகதைப் படைப்புகள் தினமணி கதிர், தினமலர், தீபாவளி மலர், அமுதசுரபி, கல்கி, புதிய பார்வை, கணையாழி, சௌராஷ்டிர மணி, மஞ்சரி, சதங்கை, இந்தியா டுடே ஆகிய இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்துள்ளன.

1.1.1 படைப்புகள்

ஆர்.சூடாமணி மொத்தம் 600 சிறுகதைகளுக்கு மேல் படைத்துள்ளார். இவர் படைத்த சிறுகதைகள் 19 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவர் சிறுகதைத் தொகுப்புகளில் சிலவற்றைக் கீழே காணலாம்.

அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன் இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978), உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா (1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001). இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.

சிறுகதை, புதினம், குறும்புதினம், நாடகம் ஆகிய நான்கு துறைகளிலும் இதுவரை 37 நூல்கள் படைத்துள்ளார். இவருடைய சில சிறுகதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. சில கதைகளை இவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 1962 முதல் மொழி பெயர்ப்பாக அன்றி நேரடியாகவும் ஆங்கிலத்தில் சிறுகதை படைத்து வருகிறார்.

தமிழில் எழுதிய பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் அடையாளம் காணப்படவில்லை. க.நா.சு மிகத்தயங்கி பெண் எழுத்தாளர் என்னும் வரிசையில் ஓர் இடத்தை அவருக்கு அளிக்கிறார். அசோகமித்திரன் மட்டுமே அவரை பொருட்படுத்தியுள்ளார். நவீன இலக்கியத்தின் அழகியலென்பதே ‘அதிர்வூட்டும்படி புதிய ஒன்றைச் சொல்லுதல்’ என ஆகிவிட்டது. சூடாமணி அன்னையருக்குரிய கனிவு, ஒத்திசைவு, விவேகம் ஆகியவற்றை முன்வைத்தவர். ஆகவே நல்லுபதேசக் கதைகளை எழுதியவர் என அவர் ஒதுக்கப்பட்டார். ஆனால் இலக்கிய அழகியல் இன்னும் விரிவான அளவுகோல்களைக் கொள்ளும்போது சூடாமணி ஏற்படையக்கூடும்